வண்டலுார் அடுத்துள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில், வார விடுமுறை நாளான நேற்று, போதிய பேருந்துகள் இல்லாமல் பயணியர் தவித்தனர்.
இதுகுறித்து பயணியர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, விடுமுறை நாளான நேற்று, பல இடங்களுக்கு போதிய பேருந்துகள் இல்லை. குறிப்பாக திருவண்ணாமலை செல்ல, 2: 00 மணிக்கு வந்த பயணியர், மாலை 4: 00 மணியாகியும் பேருந்து இல்லாததால், கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திருச்சி, மதுரை செல்ல காத்திருந்த பயணியர், பேருந்து இல்லாததால் அதிருப்தியடைந்தனர்.
வார விடுமுறை நாட்களில், மதியம் 12: 00 மணியிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணியருக்கு, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.
எனவே, வார விடுமுறை நாட்களில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ஊர்களுக்கும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.