குமரகோட்டம் கோவிலில் நெரிசலுக்கு தீர்வு

75பார்த்தது
குமரகோட்டம் கோவிலில் நெரிசலுக்கு தீர்வு
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செவ்வாய், சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பக்தர்கள் அதிகமாக வரும் விசேஷ நாட்களில் நெரிசலை தவிர்க்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதததால், கோவில் ரிஷி கோபுரம் நுழைவாயில் பகுதியில் வழியை மறித்து கூட்டமாக நின்று மூலவரை தரிசனம் செய்து வநதனர்.

இதனால், கோவிலுக்கு உள்ளே இருந்து சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்கள், வெளியில் இருந்து உள்ளே செல்லும் பக்தர்கள், நெரிசலில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வந்தது.

எனவே, கோவிலில் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் பக்தர்களை வரிசைப்படுத்தவும், ரிஷி கோபுரம் நுழைவாயில் பகுதியில் கூட்டமாக நிற்பதை தவிர்க்கவும், கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்தான செய்தி வெளியானதைஅடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், கூட்ட நெரிசலை தவிர்க்க மூலவர் சன்னிதியில் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு, அர்ச்சனை செய்ய உற்சவர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரிஷி கோபுரம் நுழைவாயிலில் இரு ஊழியர்கள் பக்தர்களை வரிசையில் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழியை மறித்து நிற்கும் பக்தர்களை, கோவிலுக்கு உள்ளே செல்லுமாறு ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி