காஞ்சிபுரம் மாவட்டம்
உத்திரமேரூர் வட்டாரத்தில் நவரை பருவ சாகுபடி பணிகளை தொடர்ந்து, தற்போது சொர்ணவாரி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே, உத்திரமேரூர் வட்டாரத்திற்கு கோடைக்கால சாகுபடிக்கான இலக்கு 500 ஏக்கர் பரப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உத்திரமேரூர் வட்டார வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைக்கால சாகுபடிக்கான நிலபரப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உத்திரமேரூர் வட்டாரத்தில் வேர்க்கடலை 250 ஏக்கரிலும், உளுந்து மற்றும் எள் தலா 75 ஏக்கர் நிலப்பரப்பிலும் கோடை காலத்தில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தற்போது வரை, 46 ஏக்கர் பரப்பில் எள் பயிறும், 16 ஏக்கரில் உளுந்தும், 8 ஏக்கர் நிலப்பரப்பில் வேர்க்கடலையும் சாகுபடி செய்ய இடம் மற்றும் விவசாயிகள் தேர்வாகி உள்ளனர்.