மூதாட்டி கொலை வழக்கில் இரண்டு பேருக்கு காப்பு

63பார்த்தது
மூதாட்டி கொலை வழக்கில் இரண்டு பேருக்கு காப்பு
வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா, 65. கணவரை இழந்த இவர், அப்பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி காலை மூதாட்டி சுகுணா வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 10 சவரன் நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

இது குறித்து, சுகுணாவின் மகள், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவர் அளித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், வீட்டு உரிமையாளர் சுகுணாவின் வீட்டில் ஏற்கனவே குடியிருந்த வேலுார் மாவட்டம், கோவிந்தரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன், 26, மற்றும் அவரது நண்பரான கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியைச் சேர்ந்த பெரியண்ணா என்கிற பிரபு, 24, ஆகிய இருவரும் மூதாட்டியின் செயல்பாடுகளை கண்காணித்தும், அவரது தனிமையை பயன்படுத்தி நகைகளை கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 சவரன் நகைகள் மீட்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி