குரோம்பேட்டை, நியூ காலனியில் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால், மக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.
தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், 28 வார்டு, குரோம்பேட்டை, நியூ காலனியில், மூன்று, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம்செய்யப்படுகிறது.
நேற்று காலை, வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது. இது தெரியாமல், பலர், தண்ணீரை மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளில் நிரப்பினர்.
இந்த தண்ணீரை குளிக்க பயன்படுத்திய போது, கடும் துர்நாற்றம்வீசியது. அதன் பின், கழிவுநீர் கலந்த தண்ணீர் வினியோகிக்கப்பட்டது தெரியவந்தது.
அதன்பின், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. ஒவ்வொருவரும் தொட்டிகளில் நிரப்பிய தண்ணீரை வெளியேற்றினர்.