மதுராந்தகம் அடுத்த எல். என். புரம் கிராமத்தில், வயல்வெளி பகுதியில் தண்ணீர் குடிக்க சென்ற இரண்டு பசு மாடுகள், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
எல். என். புரம் கிராமம், கன்னிக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன், 50; இவர், இரண்டு பசு மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று, மாடுகளை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
பின், மதியம் அருகிலுள்ள வயல்வெளி பகுதியில் தண்ணீர் குடிக்க கறவை மாடுகள் சென்றன. அப்போது, நேற்று முன்தினம், பெய்த கனமழையின் காரணமாக, வயல்வெளியின் மேல் சென்ற, மின் கம்பி ஒயர் அறுந்து வயல்வெளியில் கிடந்துள்ளது.
இந்நிலையில், தண்ணீர் குடிக்க சென்ற இரண்டு கறவை மாடுகள், மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து, மின்வாரியத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்த மின்வாரியத் துறையினர், உடனடியாக மின்சாரத்தை துண்டித்து, வயல்வெளியில் இருந்து பசு மாடுகளை அப்புறப்படுத்தினர். பின், மதுராந்தகம் கால்நடை மருத்துவர்கள், உடற் கூராய்வு செய்தனர்.