இந்த வார ராசிப்பலன்- ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வரை 2022

54935பார்த்தது
இந்த வார ராசிப்பலன்-  ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வரை 2022
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் வளமான பலன்களை பெறலாம். பிறர் விஷயத்தில் தலையிடாமல் பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பு. பிரதான கிரகங்களான குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகவும் நன்றாக இருக்கும். சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். பூர்வீக சொத்து வகையில் ஆதாயங்களை அடைவீர்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை தக்க நேரத்தில் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் கடந்த கால பிரச்சனைகள் குறைந்து நல்ல லாபத்தை அடையும் வாய்ப்பு உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய முடியும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் அமையும். வேலை நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த இடம் மாற்றங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எந்த ஒரு பணியும் குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.
சந்திராஷ்டமம் - 02-09-2022 மாலை 05.55 மணி முதல் 04-09-2022 இரவு 09.42 மணி வரை.

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் ரீதியாக பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தற்போதைக்கு தவிர்ப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு வரும் புதன்கிழமை முதல் சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். பெண்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதன் 5-ல் ஆட்சி, உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் எந்த செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பொருளாதார அனுகூலங்களை பெறுவீர்கள். ஆடம்பர செலவுகளை தற்போதைக்கு குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். சர்ப்ப கிரகமான கேது 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் வியக்கத்தக்க அளவிற்கு ஆதாயங்களை அடைவீர்கள். புதிய திட்டங்களை தீட்டி அதில் வெற்றி காண முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும் நிலைமையை சிறப்பாக கையாண்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். உத்தியோக ரீதியாக உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்க முடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்த மன கவலைகள் எல்லாம் விலகி நிம்மதி உண்டாகும். அசையும், அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக சுபச் செலவுகளை செய்ய நேரிடும். பங்காளி வகையில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வந்து மன அமைதி ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது, கந்த சஷ்டி கவசம் படிப்பது வாழ்வில் மேன்மையை தரும்.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ராசி அதிபதி புதன் 4-ல் ஆட்சி உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சூரியன் 3-ல், ராகு 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்து பொருளாதார அனுகூலங்களை பெறுவீர்கள். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் குறைந்து மன நிம்மதி ஏற்படக்கூடிய அமைப்பு உண்டு. சிலருக்கு வண்டி, வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் தற்போது நிறைவேறும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் கூட தற்போது உங்களை புரிந்து கொண்டு நட்புடன் பழகுவார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒரு பெரிய மனிதனின் ஆதரவு கிடைப்பதால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து விட முடியும். தொழில் ரீதியாக இருந்த பொருள் தேக்கங்கள் விலகி நல்ல வளர்ச்சி அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு வெளியிடங்களில் சிறப்பான ஆதரவு கிடைக்கும். உத்தியோக ரீதியாக கௌரவமான நிலை உண்டாகும். உடன் வேலை செய்பவரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது விலகி பணியில் நிம்மதியுடன் பணியாற்ற முடியும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த பொருளாதார உதவிகள் செய்வது, படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 28, 3.

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். சுக்கிரன் 1, 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் நிலை ஏற்படும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வெளி நபர்களுடைய செயல்கள் காரணமாக தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். வேலையாட்கள் மூலமாக வீண் பிரச்சினைகள், அதுமட்டுமில்லாமல் எந்திரங்கள் பழுதாவதால் எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஒருபுறம் சில நெருக்கடிகள் இருந்தாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்களும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடி இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டு குறித்த நேரத்தில் எடுத்த பணியை முடிப்பீர்கள். அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு பேசினால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் செயலில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தால் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். சர்பேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது மேன்மையை தரும்.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ராசி நாதன் சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், 3-ல் கேது சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். 2-ல் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுடைய பேச்சுத் திறமையால் பல்வேறு வெற்றிகளை குவிப்பீர்கள். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய கௌரவ பதவிகள் உங்களைத் தேடி வரும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை அடையும் யோகம் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எண்ணிய காரியங்கள் எல்லாம் தற்போது கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். வெளி நபர்கள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு தூர பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பும் அதன் மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி பணியில் சுதந்திரமாக செயல்பட முடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உடல் வேலை செய்பவர்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன இடையூறுகளை எளிதில் சமாளிக்க முடியும். நேரத்துக்கு உணவு உண்பது மூலம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 28, 31, 1.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 12---ல் சூரியன், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. 7-ல் சஞ்சரிக்க கூடிய குரு பகவான் வக்ர கதியில் இருப்பதால் பண விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் நல்லதாக ஏதாவது ஒரு செயல் செய்தால் கூட அதனை உடன் இருப்பவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படும். சக்திக்கு மீறி வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எண்ணியது ஒன்றாக இருக்கும், நடப்பது ஒன்றாக இருக்கும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைக்கவும். கிடைக்கும் சிறு வாய்ப்பு கூட தவறவிடாமல் ஒவ்வொரு காரியத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்தால் போட்ட முதலீட்டை எடுத்து விடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பிறருடைய பணியும் சேர்த்து நீங்கள் செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். நீங்கள் தற்போது இருக்கக்கூடிய நிலையே ஒரு சிறப்பான நிலையாகும். பிறர் சொல்வதைக் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. அதிகாரியிடம் தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்பட்டால் நிலைமையை சமாளித்து விடலாம். துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்று.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 3.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்களை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ராசியாதிபதி சுக்கிரன் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மாத கோளான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். குரு, சனி வக்கிர கதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த மறைமுக நெருக்கடிகள் எல்லாம் முழுமையாக விலகி பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடைய முடியும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவுவதால் லாபகரமான பலன்களை அடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்து நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க முடியும். நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பதால் உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சர்ப்ப கிரகமான ராகு 7-ல், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, கந்த சஷ்டி கவசம் படிப்பது, அஷ்டலட்சுமியை தரிசிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 28, 1, 2.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டும் இல்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நெருங்கியவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய நிலை ஏற்படும். உங்களுக்கு இருந்த பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் விலகி மன நிம்மதி அடைவீர்கள். எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதன் லாப ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி உயர்வான நிலையினை எட்ட முடியும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளையும் உத்தரவுகளையும் வரும் நாட்களில் பெற முடியும். கடந்த காலங்களில் இருந்து வந்த வம்பு வழக்குகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வரும். தகுதி வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் உங்களுக்கு இருந்த பணிச்சுமைகள் எல்லாம் வரும் நாட்களில் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் நீண்ட நாட்களாக நீங்கள் எண்ணியவற்றை தற்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கடந்த காலங்களில் நீங்கள் உழைத்ததற்கான சன்மானம் தற்போது கிடைத்து உங்களின் பொருளாதார தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, கந்த சஷ்டி கவசம் படிப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 28, 29, 30.

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் குறைந்து ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் எளிதில் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் பெரியோர்களுடைய ஆதரவானது சிறப்பாக இருந்து தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு கூட நல்ல தீர்வு கிடைக்கும். தற்போது 8-ல் சஞ்சரிக்க கூடிய சுக்கிரன் வரும் புதன் கிழமை முதல் 9-ல் சஞ்சரிப்பதால் வார பிற்பாதியில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாண்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த பொருள் தேக்கங்கள் எல்லாம் விலகி உங்களுடைய பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து விட முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். அதிகாரியிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி சுமூக நிலை உண்டாகும். கடினமான பணிகளை கூட நீங்கள் எளிதில் கையாண்டு சிறப்பாக செய்து முடித்து விடுவீர்கள். துர்க்கையம்மனை வழிபடுவது, சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்ற இறக்கமான நிலை இருப்பதால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களின் அமைதியை குறைப்பார்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது மட்டுமில்லாமல் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது மிகவும் நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சிறு வாய்ப்பை கூட தவறவிடாமல் ஒவ்வொரு செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் தற்போது இருக்கும் நிலைமையை சமாளிக்க முடியும். அரசு வழி அதிகாரிகள் செய்யும் கெடுபிடிகளால் உங்கள் செயல்களில் தாமதமும் அதன் மூலம் நிம்மதி குறைவும் ஏற்படும். முடிந்த வரை வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்போதைக்கு தள்ளி வைக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் தேவையற்ற பழிச் சொற்களை எதிர்கொள்ள நேரிடும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு இடையூறுகளை செய்வார்கள். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, படிக்கும் மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வது நன்று.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3.
சந்திராஷ்டமம் - 26-08-2022 மாலை 06.32 மணி முதல் 29-08-2022 அதிகாலை 04.15 மணி வரை.

கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். உங்களுக்கு 2-ல் சாதகமாக சஞ்சரிக்கும் குரு பகவான் தற்போது வக்கிர கதியில் இருப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் மூலமாக எதிர்பாராத விரயங்களை எதிர்கொள்வீர்கள். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட தற்போது தாமதமாகும். அதிக வேலைபளு காரணமாக உங்களது ஓய்வு நேரம் குறையும். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய ஆற்றல் இருந்தாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் நீங்கள் சற்று முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பதை தற்போதைக்கு தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களுடைய பணியும் சேர்த்து நீங்கள் செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படலாம். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் வெளி நபர்களிடம் பேசுகின்ற பொழுது சிந்தித்துப் பேசுவது, முடிந்தவரை உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, கோவில்களில் வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 28, 3.
சந்திராஷ்டமம் - 29-08-2022 அதிகாலை 04.15 மணி முதல் 31-08-2022 பகல் 12.03 மணி வரை.

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
சமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான ஆதாயங்களை பெறுவீர்கள். வெளி நபர்களின் ஆதரவானது மிகவும் சாதகமாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகள் உங்களை நாடி வரும். புதன் உங்கள் ராசிக்கு 7-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் மிகவும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்கள் தற்போது நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அனைத்து செயலிலும் புது தெம்புடன் செயல்படுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் எல்லாம் தற்போது கிடைக்கும். புதிய வேலையை எதிர்பார்த்தவர்களுக்கு எண்ணங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்து வழியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 28, 29, 30.
சந்திராஷ்டமம் - 31-08-2022 பகல் 12.03 மணி முதல் 02-09-2022 மாலை 05.55 மணி வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,

தொடர்புடைய செய்தி