சென்னிமலை அடுத்த கீழகுப்பத்து பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் சதீஸ் (29). இவரது மனைவி சத்யா (27). இத்தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. லாரி டிரைவரான சதீஸ், கடந்த 14ம் தேதி மது அருந்தியவிட்டு தனது மனைவி சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால், சத்யா, இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு, அருகிலுள்ள தனது அப்பா வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.
பின்னர், 15ம் தேதி காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சதீஸ் தூக்குமாட்டிய நிலையில் தொங்கிக்கொண்டிருந்தார். பின்னர், அவரை மீட்டு, பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். சதீஸ் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோன்று, பர்கூரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ரவிக்குமார் (29). இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. மதுபழக்கத்திற்கு அடிமையான ரவிக்குமார், வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இதனை அவரது மனைவி ஆர்த்தியும், பெற்றோர்களும் கண்டித்துள்ளனர். இந்நிலையில், ரவிக்குமார் நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில், பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.