கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை கோயிலுக்கு செல்லும் வழியில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தவெக தொண்டர் ஒருவர் பறக்கவிட்டுச் சென்ற சம்பவம் கடந்த வாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொடியை அகற்றினர். மேலும், ஆலந்துறை காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து கொடியை பறக்கவிட்ட நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தவெக கொடி பறக்கவிடப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மலை உச்சியில் தவெக தொண்டர் ஒருவர் கொடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்தான் மலை உச்சியில் பறந்த கொடியை ஏற்றினாரா, அல்லது இவ்வளவு கடுமையான சோதனைகளையும் மீறி கொடியை எப்படி மேலே எடுத்துச் சென்றார் என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.