விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு - அண்ணாமலை கருத்து

59பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுதான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால் அது தவறு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இடைத்தேர்தலின் முடிவுதான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால், அது தவறு. காரணம் இதற்கு முன்பும் அதுபோல இருந்தது இல்லை. இப்போதும் அப்படி இருக்கப்போவதில்லை. இருப்பினும், மக்களின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னதான் மாற்றுக்கருத்து வைத்தாலும்கூட, மக்களின் முடிவை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதேநேரத்தில், இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் இணைந்து கடுமையாக களப்பணியாற்றினர். வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அரசின் அதிகார பலம், பண பலம், படை பலம் அனைத்தையும் தாண்டி இத்தனை மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதுவும் ஒரு சாதனைதான். எனவே, நிச்சயமாக வருகின்ற காலம் மாறும். இடைத்தேர்தல் முடிவுகளை முன்னோட்டமாக அமைச்சர்கள் எடுத்துக் கொண்டால், இதற்குமுன்பு தமிழகத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்துள்ளது. எனவே, இந்த தேர்தல் முடிவை முன்னோட்டமாக அமைச்சர்கள் எடுத்துக் கொண்டால், நிச்சயமாக இந்த ஆட்சி 2026 தேர்தலில் ஆட்சியை இழக்கும் என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி