வியாசர்பாடி 4-வது பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் வியாசர்பாடி சத்தியமூர்த்திநகர் பிரதான சாலையில் வசிக்கும் ரவுடி நாகேந்திரனின் தங்கை கற்பகத்திடம் (46) வட்டிக்கு ரூ. 1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனுக்கு வட்டி, அசலுடன் சேர்த்து முருகன் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளார்.
ஆனாலும் கற்பகம், மேலும் ரூ. 3 லட்சம் வேண்டும் என மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முருகன், அண்மையில் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் முருகன் வீட்டுக்குச் சென்ற கற்பகமும், அவரது கணவர் சதீஷும் அங்கிருந்த அவரது மகளை கத்தி முனையில் மிரட்டி தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து கற்பகம், அவரது கணவர் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.