ஆட்சியாளர்கள் உதவியோடு கள்ளச்சாராயம் விற்பனை - பிரேமலதா

71பார்த்தது
ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராய விற்பனை நடைபெறுகிறது என்று தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளகுறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து மனு கொடுத்தார்.

பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கள்ளகுறிச்சியில் இத்தனை உயிர்கள் போனபின்பு, இன்றைக்கு இந்த அரசு ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை அழித்துவிட்டதாகக் கூறுகிறது. இப்போது எடுத்த இந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே ஏன் எடுக்கவில்லை? போன வருடம் இதேபோன்ற நிகழ்வு நடந்தது. அதன்பிறகு சரியான நடவடிக்கை எடுத்து தடுத்திருந்தால் இத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

அரசாங்கம் என்ன செய்கிறது?. கள்ளச் சாராயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்படி இருக்கும்போது கள்ளச் சாராயம் மீண்டும் ஏன் வருகிறது? இதற்கு யார் துணை போகிறார்கள்? ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல்துறை துணையில்லாமல் நிச்சயமாக கள்ளச் சாராயம் காய்ச்ச முடியாது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுகிறது, விற்கப்படுகிறது என்று கள்ளக்குறிச்சி மக்கள் சொல்கிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி