கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து தொட்டில்பாலம் செல்லும் அரசு பேருந்தில் லிஜீஷ் என்பவரது மனைவி செரீனா (37) என்பவர் பயணம் செய்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான செரீனா திருநாவாயா சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், பேருந்து பெரமங்கலம் வந்தபோது செரீனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பஸ் உடனடியாக மருத்துவமனைக்கு திருப்பி விடப்பட்டது. மின்னல் வேகத்தில் வந்த பேருந்து மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டு மருத்துவர்கள் வேகமாக வந்து பேருந்தின் உள்ளே வைத்து அவருக்கு பிரசவம் பார்த்தனர். இந்நிலையில் செரீனாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.