கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

காங்கேயம் காடையூரில் மெர்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை எண் 81 அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு கல்வி பயிலும் மாணவ மாணவிகள் இந்த சாலை வழியாகதான் பள்ளிக்கு செல்கின்றனர். தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டன. அப்போதே பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி வேன் மற்றும் பேருந்துகள், மாணவ மாணவியர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் செல்வதற்கு வழிவிட்டு விட்டு மையத் தடுப்புகளை அமைக்க கூறியதாகவும் தெரிகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் தொடர்ச்சியாக தடுப்புக்களை அமைத்துவிட்டனர். 

இதனால் நீண்ட தூரம் சுற்றிக் கொண்டுதான் பள்ளிக்கு வர வேண்டியுள்ளது என புகார் எழுந்தது. இன்று காலை மாணவ மாணவியர்களை அழைத்துவந்த பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்து திடீரென தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் காத்திருந்தன. பின்னர் காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி சாலையில் உள்ள மையத் தடுப்புகளை அகற்றுவதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி