சேலம்: சங்ககிரி அருகே பாப்பான்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி (30). இவரது அண்ணன் சரத்குமாரின் 4 வயது மகன் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அங்கு இச்சி மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தை சுற்றி திண்ணை போன்று அமைத்து இருந்தனர். அதில் ‘ஏர்கன்’ துப்பாக்கியை வைத்திருந்தனர்.
சரத்குமாரின் 4 வயது மகன் அந்த துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறியது.
அப்போது தமிழரசின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்ததில், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தமிழரசிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பரிதாபமாக இறந்தார். சங்ககிரி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தமிழரசி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.