சிவகாசியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால், மக்கள் அச்சம், விபத்து அபாயம் - நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்?.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி சாலைகளில் கால்நடைகள் கட்டுப்பாடின்றி சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்போர் சிலர் போதிய வசதி இல்லாத காரணத்தால் தாங்கள் வளர்க்கும் பசு மாடுகளை நகர் பகுதிக்கு கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். நகர் பகுதியில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் இந்த பசு மாடுகள் தெருவோர குப்பைகளில் இருக்கும் கழிவுகளை உண்டு சாலையில் சுற்றி வருகின்றன. இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன.
இது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதை தடுக்க யாரும் மாடுகளை சாலையில் விடக்கூடாது என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை செய்தும் அதை மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்ளாமல் மாடுகளை சாலையில் திரிய விட்டுள்ளதால் சிவகாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாட்டின் உரிமையாளர்களை எச்சரித்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.