திருப்பூர், உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து கடந்த 29ஆம் தேதி 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. உடுமலை கால்வாயில் இருந்து ஜல்லிபட்டி ஓனாக்கல்லூர் கிளை கால்வாய் முறையான போதிய பராமரிப்பில் இல்லாமல் இருப்பதாகவும், மதகு பராமரிக்க வேண்டும் இல்லையென்றால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டாலும் பயன் இருக்காது வீணாகும் போகும் என விவசாயிகள் சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை நேரிலும் கோரிக்கை மனுக்களும் அளித்தனர்.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை அலட்சியம் காரணமாக தற்போழுது வரை கிளை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு அருகில் இருக்கும் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னை தோப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் பாசன நீர் தேக்கம் அடைந்துள்ளது. ஒரு சில இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமலும் பயிர் செய்த இடங்களில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
மேலும் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் தற்போழுது விவசாய நிலங்களில் அதிக அளவு தேக்கம் அடைந்தும் சாலையில் சென்று கொண்டிருப்பதால் விவசாயிகளுக்கு பாசன நீர் கிடைக்காத நிலை உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இனியும் அலட்சியம் காட்டாமல் மதகை பராமரித்து பாசன கால்வாயில் தேவையான அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.