தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறையை 2ஆக பிரித்து கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் கொண்டு வருவதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போழுது நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு நெடுஞ்சாலைத்துறையில் புதிய கோட்டம் உருவாக்கப்படுமா? என்று முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜீ கேள்வி எழுப்பினார்.
இதற்கு தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு பதில் அளித்து பேசுகையில் நிர்வாக வசதிக்காக தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தை 2ஆக பிரித்து கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு நெடுஞ்சாலைத்துறையில் புதிய கோட்டம் உருவாக்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இந்த வாரத்தில் இது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் எங்களை அழைத்துள்ளார். ஆய்வு செய்யப்பட்டு இந்தாண்டே கொண்டு வருவதற்கு அரசு முயற்சிக்கும் என்று தெரிவித்தார்.