மதம் மாறினால் ரூ. 10 கோடி தருவதாக மோசடி: ஆசாமி கைது

2258பார்த்தது
மதம் மாறினால் ரூ. 10 கோடி தருவதாக மோசடி: ஆசாமி கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு IMO என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற IDல் இருந்து தொடர்பு கொண்டு பேசியவர் அவரிடம் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூபாய் 10 கோடி தருவதாக கூறி அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டடுள்ளார். அதனை நம்பி மேற்படி இளைஞர் அந்த நபருக்கு ரூபாய் 4,88,159 பணத்தை Gpay மூலம் அனுப்பியுள்ளார்.

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி இளைஞர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். மேற்படி புகாரின் அடிப்படையில் எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பவர் பாதிக்கபட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 26. 04. 2024 தஞ்சாவூர் சென்று ராஜவேலின் வீட்டருகே வைத்து அவரை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர்.

தொடர்புடைய செய்தி