ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவியாளர் உட்பட இருவர் கைது

2569பார்த்தது
ஆவடி அடுத்த பருத்தி பட்டு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கு சொந்தமான நிலம் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள நிலையில் தனது காலி மனையை நிலம் வரன் முறைப்படுத்த பூந்தமல்லியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்தவர்கள் நிலம் உரிமம் வழங்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்ச பணம் கொடுக்க மனம் இல்லாததால் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தலைமையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை இளையராஜாவிடம் கொடுத்து அனுப்பிய நிலையில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தியாகராஜன்(48), ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

மேலும் அவருடன் லஞ்ச பணத்தை வாங்க உதவியாக இருந்த ஒப்பந்த ஊழியர் கிரிதரன்(48), ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலம் உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இரண்டு பேர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி