
தஞ்சாவூர்: அண்ணன் கைது; காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகள்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் அய்யா தினேஷ் (32). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இவர் நடுக்காவேரி பேருந்து நிறுத்தத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, இவரை அங்கு வந்த காவல் துறையினர் விசாரணைக்கு எனக் கூறி நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பின்தொடர்ந்து குடும்பத்தினரும் காவல் நிலையத்துக்குச் சென்றனர். பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிந்து அய்யா தினேஷை கைது செய்தனர். அய்யா தினேஷ் மீது பொய் வழக்கு போடாதே என்றும், அவரை வெளியே விடுமாறும் காவல் துறையினரிடம் குடும்பத்தினர் வலியுறுத்தினர். ஆனால் அய்யா தினேஷ் வெளியே விடப்படாததால், மனம் உடைந்த அவரது தங்கைகளான மேனகா (31), கீர்த்திகா (29) காவல் நிலையம் முன் விஷம் குடித்தனர். இதனால் மயக்கமடைந்த இருவருக்கும் நடுக்காவேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா புதன்கிழமை காலை உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.