சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 32), பொக்லைன் உரிமையாளர். பனமரத்துப்பட்டி ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் நவீன் (27). இருவரும் நண்பர்கள். நேற்று நண்பர்கள் இருவரும் பனமரத்துப்பட்டி பாலம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள துரித உணவக கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 4 மர்ம நபர்கள் கத்தி மற்றும் அரிவாளால் ஜெகதீசனை வெட்டி உள்ளனர். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஜெகதீசனை மீட்டு சிகிச்சைக்காக சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி தகவல் அறிந்த பனமரத்துப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பனமரத்துப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் மகன் பாலசுப்பிரமணி (23), நாமக்கல் மாவட்டம் நெ. 3 குமாரபாளையம் பகுதி சேர்ந்த ராஜசேகர் (21), தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த குருநாத் (21), கொண்டலாம்பட்டி கரட்டூர் பகுதியை சேர்ந்த கவுதம் (21), மல்லூர் கல்லியன் வலசு பகுதியை சேர்ந்த உமா சங்கர் (40) ஆகியோர் ஜெகதீஷை வெட்டியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது தெரியவந்துள்ளது.