மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி அணை நிரம்பியது. இதன்மூலம் கடந்த ஆண்டில் (2022) மட்டும் அணை 3-வது முறையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது. ஒரு சில நாட்களில் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. ஒரு கட்டத்தில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த மாதம் 27-ந் தேதி அணையின் நீர்மட்டம் 111 அடிக்கு கீழ் குறைந்தது.
அன்று முதல் நேற்று முன்தினம் காலை வரை அணையின் நீர்மட்டம் 110 அடியாக நீடித்து வந்தது. இந்த நிலையில் அணை நீர்மட்டமானது நேற்று காலை 110 அடிக்கு கீழ் குறைந்து 109.96 அடியாக இருந்தது. அதாவது 24 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 110 அடிக்கு கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 167 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.