

புதுவை தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை தலைமை அலுவலகம் உள்ளது. தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் தாங்களாகவே அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் தொடர்புகொண்ட நபர், "ஒரு முறை சொன்னால் புரியுமா, வெடிகுண்டை தீயணைப்பு வண்டியில் வைத்துள்ளேன்" என மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை முழுமையாக சோதனையிட்டனர். தீயணைப்பு நிலைய அலுவலகம், அதிகாரிகள் அறை, தீயணைப்பு வீரர்களின் அறைகள், தீயணைப்பு வண்டிகள் அனைத்திலும் முழுமையாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இதனால் புரளி என தெரியவந்தது. இதன்பின் தீயணைப்பு வீரர்கள் நிம்மதியடைந்தனர். போலீசார் தீயணைப்பு துறைக்கு மிரட்டல் விடுத்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.