ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக பிரகாஷ் களம் காண்கிறார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக குமாரபாளையம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், இருசக்கர வாகன பிரச்சார இயக்கமானது நடைபெற்றது. குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மேலும் விசைத்தறி தொழிலாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் ஆட்சியால், சிறு குறு விசைத்தறி தொழில் கூடங்கள் குமாரபாளையத்தில் அதிகம் மூடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி , பணமதிப்பு இழப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும், தொடர்ந்து ஜவுளி தொழிலை மத்திய அரசு கண்டுகொள்ளாததால், குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி தொழிலே முழுமையாக அழியும் நிலை ஏற்பட்டதற்கு மத்திய அரசு தான் காரணம் என துண்டு பிரசுரங்களை வழங்கி தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த இருசக்கர வாகன பிரச்சார இயக்கத்தில் கலந்து கொண்டனர்.