கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசியமங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டு விழா இன்று (மார்ச் 26) நடைபெற்றது. சின்னகாட்டி பாப்பிநாயக்கர் மந்தை சார்பில் நடைபெற்ற இந்த மாடு மாலை தாண்டும் விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த 13 ஊர் நாயக்கர் மந்தைகளை சேர்ந்த மந்தையர்களுக்கு வரவேற்பும், மாடுகள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற மாலை தாண்டும் விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து வருகை தந்த 13 மந்தைகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. மாலை தாண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலில் எல்லைக்கோட்டை நோக்கி வந்த 3 மாடுகளின் மேல் கன்னி பெண்கள் 3 பேர் மஞ்சள் பொடியினை தூவி வரவேற்றனர். பின்னர் வெற்றி பெற்ற மாடு மந்தைதாரர்களுக்கு நாயக்கர்கள் முறைப்படி எலுமிச்சை கனி பரிசாக வழங்கப்பட்டது.
இதில் பேரூர் காதில் மாதா நாயக்கர் மந்தையை சேர்ந்த மாடு முதலாவதாகவும், வாலியாம்பட்டி கோனா தாதா நாயக்கர் மந்தையை சேர்ந்த மாடு இரண்டாவதாகவும் வந்து வெற்றி பெற்றது. பின்னர் நாயக்கர்கள் முறைப்படி உறுமி மேளங்கள் முழங்க தேவராட்டம் ஆடி மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிழாவை கண்டு களித்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.