கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆறு, மாவட்டத்தில் உள்ள 80 சதவீத மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
இந்த நிலையில், தற்போது ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் , இந்த ஆறு தேங்காய் பட்டணம் கடலில் கலக்கும் பகுதி வழியாக ஆற்றில் உட்பு நீர் உட்பகுந்துள்ளது. இதனால் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ஆற்றில் உள்ள குடிநீர் உறை கிணறுகளில் உப்பு நீர் புகுந்ததால் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்கள் தற்போது உப்பு நீர் கலந்த குடிநீர் விநியோகம் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து பொது மக்களின் புகாரின் பேரில், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் உள்ள குடிநீர் கிணறுகளை பாதுகாக்கும் பொருட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் பேச்சிப்பாறை அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதை அடுத்து மறுகால் வழியாக கோதையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து அதிகமாக கொட்டுவது போல் இன்று தண்ணீர் கொட்டியதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு உற்சாகமாக குளியல் போடலாம் என காத்திருந்த சுற்றுலா பயணிகள் தண்ணீர் வந்தும், குளிக்க அனுமதி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.