செங்கல்பட்டு அடுத்த பாலுார் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், 31. இவர் சம்பவதினத்தன்று இரவு, வில்லியம்பாக்கம் கிராமத்தில் உள்ள உணவகத்திற்கு, பாலுார் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் விமல்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
இரவு 10: 30 மணிக்கு, மீண்டும் பாலுார் நோக்கி, செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில், தேவனுார் கால்நடை மருத்துவமனை அருகில் வந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாலுார் போலீசார், இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, வெற்றிவேல் நேற்று உயிரிழந்தார்.
விமல்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து, பாலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.