திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள இரும்புலிச்சேரியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 33. இவரது சித்தப்பா மகன் கடும்பாடி, 45; கூலித் தொழிலாளர்கள்.
நேற்று காலை 8: 00 மணிக்கு, இருவரும் 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். தினேஷ்குமார் வாகனத்தை ஓட்டினார்.
அதே பகுதியில் சென்றபோது, நாவலுார் தனியார் நிறுவன ஊழியர் வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடும்பாடி படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து, தினேஷ்குமாரின் சகோதரர் சுரேஷ், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.