தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய் வரும் 2026-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் களம் இறங்குவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை , புதுச்சேரி ஜிப்மர், சேலம் அரசுமருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த நடிகர் விஜய் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். முன்னதாக கள்ளச்சாராயத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என அறிக்கை வெளியிட்டிருந்தார்.