வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கடந்த 25ம் தேதி திமுகவின் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் வேலூரின் பிரபலமான உணவு வகையான முட்டை சேமியா சாலையோர கடைகள் உள்ளன. இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென வந்த திமுக நிர்வாகிகள் சிலர் முட்டை சேமியா போடுவதை நிறுத்தும்படியும், கடையை அங்கிருந்து தள்ளிவிடும்படியும் கூறியுள்ளனர். முன்னறிவிப்பு இன்றி எங்களால் கடையை எடுக்க முடியாது என கடைக்காரர் கூறியதற்கு ஆந்திரமடைந்த நிர்வாகிகள் "நாளையில் இருந்து கடை போட மாட்டீர்கள்" என மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து திமுக தரப்பில் கேட்டபோது "அன்றைய தினம் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டத்துக்கு மக்கள் ஏராளமானோர் வந்து அமர்ந்திருந்தார்கள். மேலும் மேடையில் சிறப்பு அழைப்பாளர் பேசும்போது முட்டை சேமியா கடையில் தவாவை தட்டும் சத்தமும், மசாலா நெடியும் தொடர்ந்து வந்ததால் மேடையில் பேச முடியவில்லை. மக்கள் மசாலா நெடியால் அவதிபட்டார்கள். இதனால் கூட்டத்தை தொடர முடியவில்லை. இதனால் முதலில் 2 முறை கடைக்காரர்களிடம் கொஞ்ச நேரம் நிறுத்தும்படியும் அல்லது கொஞ்ச தூரம் தள்ளிவிடும்படியும் சொன்னோம். ஆனால் அவர்கள் எங்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்" என கூறினர்.