திருத்தணி முருகன் கோயிலில் பக்தர் தவற விட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகளுக்கு பாராட்டு
திருத்தணி முருகன் கோயிலில், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் தவற விட்ட ரூ. 1. 50 லட்சம் மதிப்பிலான நகையை சிறுமிகள் பார்த்து எடுத்துச் சென்று மலைக் கோயில் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
சென்னை ஜவஹர்லால் நகரைச் சேர்ந்தவர் கவுதம் ஐ. டி. ஊழியர். அவரது குடும்பத்துடன் காரில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு செல்ல கார் பார்க்கிங் செய்த இடத்திற்கு சென்று பார்த்த போது கையில் அணிந்திருந்த ரூ. 1. 50 லட்சம் மதிப்பிலான இரண்டரை சவரன் காப்பு தவறவிட்டது பார்த்து உடனடியாக மலைக் கோயில் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். சற்று நேரத்தில் சிறுமிகள் 2 பேர் புறக்காவல் நிலையம் வந்து கார் பார்க்கிங் பகுதியில் காப்பு கிடந்ததாக கூறி பணியில் இருந்த போலீசாரிடம் வழங்கியுள்ளனர். ஆர். கே. பேட்டை பகுதியைச் சேர்ந்த பவித்ரா(12), ரேணுகா(7) என்ற சகோதரிகள் சாமி தரிசனம் செய்ய வந்த போது நகைகள் கிடந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். வறுமையிலும் பக்தர் தவறவிட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர்ந்த பன்போடு செயல்பட்ட சிறுமிகளை நகை தவறவிட்ட பக்தர் குடும்பத்தினர் மற்றும் போலீசார் வெகுவாக பாராட்டினர்.