தஞ்சாவூர் மாவட்டம், களஞ்சேரியில் ஸ்ரீ வேத வித்யா குருகுலம் அமைந்துள்ளது. இதனை சீதாராமன் என்பவர் நடத்தி வருகிறார். இவர்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து
ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து நேற்று காலை சீதாராமன் வழக்கம்போல் நடைப்பயிற்சி சென்ற போது மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சீதாராமன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சீதாராமனை தாக்கிய மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாமக வேட்பாளர் ம. க. ஸ்டாலின் தலைமையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்மாபேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். இதனையடுத்து அவர்களிடத்தில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.