கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கோடிமுனையை சேர்ந்தவர் பிரான்சிஸ் போர்ஜியோ(52). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.
இவரது உறவினரின் பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 30 ம் தேதி மாலை உறவினர் ஆசினி என்பவர் குடும்பத்துடன் பிரான்சிஸ் போர்ஜியோ வீட்டிற்கு வந்தார். இரவு ஆசினி பிரான்சிஸ் போர்ஜியோ வீட்டில் தங்கினார். வீட்டின் ஒரு அறையில் அவர் படுத்து தூங்கினார். நள்ளிரவு அவர் தூங்கிய அறையின் ஜன்னல் கதவு திறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் தனது வலது கையை பார்க்கும்போது கையில் கட்டியிருந்த ஒரு பவுன் பிரேஸ்லெட் மற்றும் ஒரு பவுன் மோதிரத்தையும் காணவில்லை. இரவு தூக்கத்தில் மர்ம நபர் யாரோ? ஜன்னல் கதவு வழியாக அவரிடமிருந்து நகைகளை பறித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பிரான்சிஸ் போர்ஜியோ குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜன்னல் வழியாக நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.