சித்தாமூர் அருகே சரவம்பாக்கம் பகுதியில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் - செங்கல்பட்டு மாவட்டம், எல்லையம்மன் கோவில் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும், 110 கி. மீ. , நீளமுடைய சாலையின் விரிவாக்க பணி, இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
அதனால், சாலையின் விரிவாக்கத்திற்கு இடையூறாக, சாலையின் இரு புறங்களிலும் இருந்த, 60 நபர்களுக்கு சொந்தமான 3, 148 சதுர மீட்டர் இடத்தை, கடந்த 2017ம் ஆண்டு நோட்டீஸ் வழங்கி, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, நிலத்தை ஒப்படைக்க, நில உரிமையாளர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.
நிலம் கையகப்படுத்த இழப்பீடு வழங்காததால், கடைகள் அகற்றப்படாமல் சாலை விரிவாக்கப்பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதால், உரிமையாளர்கள் தங்களது கடைகளை காலி செய்தனர்.
அதன் தொடர் நடவடிக்கையாக, நேற்று முதல் சித்தாமூர் பகுதியில் சாலையோரம் இருந்த கடைகளை, நெடுஞ் சாலைத் துறையினர் இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.