பழங்கால கல்வெட்டு கண்டெடுப்பு

57பார்த்தது
பழங்கால கல்வெட்டு கண்டெடுப்பு
ரிஷிவந்தியம் அடுத்த ஆவிரியூர் சிவன் கோவில் பகுதியில், கல்வெட்டுடன் கூடிய சதிக்கல் இருப்பதாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின்பேரில், விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் ரமேஷ், தொல்லியல் மாணவர்கள் மோகன்ராஜ், தனித்தமிழன், நேரு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு, சிவன் கோவில் கற்களுடன், 5 அடி உயரம் கொண்ட ஒரு துாணில், சிற்பங்களுடன் கல்வெட்டு செதுக்கப்பட்டிருந்தது. அந்த கல்வெட்டில், பிற்கால பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் 14வது ஆட்சி ஆண்டில், துலுக்கர் (துருக்கியர்) சண்டையில், அடாதெல்லா ராவுத்தர் என்பவர் இறந்ததையும், இதனால் அவருடைய மனைவி மல்லணதேவி, இவ்வூரில் தீப்பாய்ந்து இறந்தாள் என்பதையும், அந்த சதி கல்வெட்டு குறிப்பிடுகிறது. அலாவுதீன் கில்ஜி மன்னரின் படைத்தளபதி மாலிக்காபூர், தமிழ்நாட்டின் மீது படை எடுத்து வந்தபோது, அதனை எதிர்த்து சண்டையிட்டு இவ்வீரன் இறந்துள்ளார் என்று, கல்வெட்டு தகவல் குறிப்பிடுகிறது. சதிக்கல்வெட்டு துாணின் மேல் பகுதியில் சூரியன், சந்திரன் சின்னங்கள். பொறிக்கப்பட்டுள்ளது. இடதுபுறம் அடாதெல்லா ராவுத்தர் நின்ற நிலையில், வலது கையில் நீண்ட வாளை வைத்துள்ளார். வலது புறம் அவரது மனைவி மல்லணதேவி உள்ளார். இருவருக்கும் நடுவில், சிவலிங்கம் காணப்படுகிறது. இத்துாணில் நடுகல்லும், சதிக்கல்லும் சேர்ந்தவாறு உள்ளதாக, பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி