திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமதி (வயது 35). இவர் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், 20 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கலைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து இரண்டாவதாக அதே திண்டுகலைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தேன்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பேஸ்புக் மூலம் பழக்கமான காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சார்பு ஆய்வாளருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணத்தை மீறிய தகாத உறவில் வாழ்ந்து வந்தோம். இதனால் நான் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளேன். ஆனால் ஆய்வாளர் தன்னை ஏற்க மறுப்பதாக குறிப்பிட்டு காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் காவல்துறையினர் மனு ரசீது வழங்கி விசாரித்து வரும் நிலையில், கொடுத்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு சுமதி அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அவரை பெண் காவலர் ஒருவர் சமாதானம் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.