தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த உடையார்பாளையம் வேலப்பசெட்டி ஏரி முன்புள்ள பிரிவு சாலையில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கார் புரோக்கர் தர்மதுரை என்பவர் அவ்வழியே ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் உரிய ஆவணமின்றி ரூபாய் ஒரு லட்சம் ரொக்க பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூபாய் ஒரு லட்சம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உடையார்பாளையம் ஆர். டி. ஓ அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.