ஆற்காடு தாலுகா போலீசார் நேற்று (ஏப்ரல் 7) ஆற்காடு அடுத்த சாத்தூர் கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (வயது 25), வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த காட்வின் மோசஸ் (33) என்பதும், இருவரும் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.