சமயபுரம் அருகே சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த போலீஸ்

3655பார்த்தது
சமயபுரம் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் சேவல் சண்டை தடை செய்யப்பட்டுள்ளது. சேவல் சண்டைகள் நடத்தப்பட்டால் உரிய அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் எஸ். ஆர். எம் மருத்துவக் கல்லூரி அருகே காட்டுப்பகுதியில் சேவல் சண்டை மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பெயரில், போலீசார் இருங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மப்டியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சினிமா பட பாணியில் ஆங்காங்கே ஒவ்வொரு இடமாக நுழைந்து ரகசியமாக சோதனையிட்டனர்.

அப்போது இருங்களூரில் உள்ள தனியார் (SRM) மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தோப்பில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுப்பட்ட மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அஜித் (25) , ஆலன் (20) , பூபதி (34) , ஜான் நெப்போலியன் (29) , சுரேஷ் (44) , கணேசமூர்த்தி (38) , அணிஸ் அகமது (23) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து அவர்களிடம் இருந்து 7 சேவல், 12 மோட்டார் சைக்கிள்கள், 7 செல்போன்கள் மற்றும் ரூ. 6000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி