கும்பகோணத்தை அடுத்த அசூர் புறவழிச்சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை தீயிட்டு கொளுத்தியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். அசூர் புறவழிச்சாலை கும்பகோணத்தை அடுத்த அசூர் அருகே புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறவழிச்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படும் வழக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் அந்தப் பகுதி குப்பை மேடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இவ்வாறு குவிந்து காணப்படும் குப்பைகள் காற்று வீசும் நேரத்தில் பறந்து செல்கிறது. சாலையில் புகை மூட்டம் காரணமாக சாலைகளிலும் வாகனங்களில் செல்வோர் மீதும் குப்பைகள் வந்து விழுகிறது. இதனால் ஒரு சிலர் குவிந்து கிடக்கும் குப்பைகளை அவ்வப்போது தீயிட்டு கொளுத்துகின்றனர்.
இதன் காரணமாக அந்தச் சாலையில் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. அதேபோல் அருகருகே குவிந்து கிடக்கும் குப்பைகளும் தீயில் எரிவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் மெதுவாக செல்கின்றனர். சிலர் கண் எரிச்சல் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புறவழிச்சாலை ஓரம் உள்ள குப்பைகள், இறைச்சி கழிவுகளை அகற்ற வேண்டும்.