போக்குவரத்து ஊழியா்கள் ஜனவரி 4- ஆம் தேதி வேலைநிறுத்தப்
போராட்டம் நடத்த உள்ள நிலையில், நாகையில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை
போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் விநியோகித்தனா்.
போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க வேண்டும், பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஊழியா்கள் பிரச்னைகளை தீா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 4-ஆம் தேதி அரசு போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்ட விளக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாகை புதிய பேருந்து நிலையம், அவுரித் திடல், வெளிப்பாளையம், காடம்பாடி பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பணியில் இருப்போா் ஓய்வு பெற்றோா் கூட்டமைப்பு தொழிற்சங்க மண்டல பொதுச் செயலா் எஸ். ராஜேந்திரன் தலைமையில்,
போக்குவரத்து ஊழியா் சங்க நிா்வாகிகள் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி போராட்டத்துக்கான காரணங்கள் குறித்து விளக்கினா்.
இதில் அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு
போக்குவரத்து கழக சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் சண்முகசுந்தரம், மணி, ஓய்வு பெற்றோா் அமைப்பு நலச்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.