குமரி மாவட்டத்திற்கு நேற்று கள்ளக் கடல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மதியம் முதல் நள்ளிரவு வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் தேங்காபட்டனம் பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
ஆனால் தேங்கா பட்டணம் பகுதியில் காலை முதலே கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அதே வேளை பகலில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை, குறிப்பாக நேற்று நள்ளிரவு சுமார் 11 மணி வேளையில் ராமன் துறை பகுதியில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. ஒரு சில வீடுகளிலும் தண்ணீர் உட்புகுந்தது. இதில் பாதிப்படைந்த வர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த கடல் சீற்றத்தால் ராமன் துறை கல்லறை தோட்டம் பகுதியில் சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு கடலரிப்பு தடுப்பு சுவர் சேதமடைந்தது. சாலையும் சேதமாகியுள்ளது. இதில் வேறு சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இனி வரும் மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த பகுதிகளில் இதைவிட அதிகம்
பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.