குமரி மாவட்டத்தை பொறுத்தவரை மே, ஜூன், ஜூலை மாத காலங்களில் பருவமழையால் ஏற்படும் கடலரிப்பு காலங்கள் ஆகும். இந்த காலங்களில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டு, கடற்கரையோரம் வசிப்பவர்களின் வீடுகள், உடமைகள் சேதமடைவது வழக்கம். இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தீடீர் கடல் சீற்றம் நேற்று மாலையில் ஏற்பட்டது. இதில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான சுமார் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் நீர், கடலரிப்பு தடுப்பு சுவர்களை தாண்டி ஊருக்குள் புகுந்தது.
அதே நேரம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் அருகேயுள்ள இரயுமன்துறை கடற்கரை கிராமத்தில் திடீர் கடல் சீற்றத்தல் சுமார் 50 வீடுகளில் கடல் நீர் உட்புகுந்தது. மேலும் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலையும் கடலரிப்பால் துண்டிக்கப்பட்டது. தற்போது இந்த கிராமத்தில் கடலரிப்பு தடுப்பு சுவர் மற்றும், அலை தடுப்பு சுவர்கள் அமைக்க அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீர் கடல் சீற்றத்தால் பாதிப்படைந்த மக்கள் அங்கு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. போராட்டம் நடத்திய மக்களிடம், தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார், அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.