அங்கன்வாடி மைய மின்மோட்டார் பழுது

62பார்த்தது
அங்கன்வாடி மைய மின்மோட்டார் பழுது
காஞ்சிபுரம் ஒன்றியம், காலுார் ஊராட்சியில், 2018ல் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இம்மையத்தில் உள்ள சமையல் அறை மற்றும் குழந்தைகளின் கழிப்பறைக்கு தேவையான தண்ணீரை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் தொட்டியுடன் மின் மோட்டார் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்காக பொருத்தப்பட்டு இருந்த மின்மோட்டார் பழுதடைந்தது. மின்மோட்டாரை பழுது நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழற்றி, செல்லப்பட்டது. மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மின்மோட்டார் பழுது நீக்கம் செய்து, மீண்டும் பொருத்தப்படவில்லை.

இதனால், சமையல் அறைக்கு தேவையான தண்ணீரை வெளியில் இருந்து பிடித்து வர வேண்டியுள்ளது. அதேபோல, குழந்தைகள் கழிப்பறையில் குழாய் இருந்தும் தண்ணீர் வசதி இல்லாததால், பக்கெட்டில் தண்ணீர் பிடித்துச் சென்று கழிப்பறையை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.

எனவே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து பயன்பாட்டிற்கும் கொண்டு வர காலுார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.