பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானை சாவு

59பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது கடம்பூர் மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் குளம் குட்டைகளில் நீர் வறண்டு காணப்படுகிறது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமத்துக்குள் நுழைகின்றன.

இந்நிலையில், குரும்பூர் வனத்தில் இருந்து வெளியே வந்த பெண் யானை, கடும் வெயிலில் தண்ணீர் தேடி அலைந்தது. அப்போது பழனிச்சாமி என்பவரின் தோட்டத்தில் தண்ணீர் இருப்பதை கண்டு அங்குள்ள குழியில் இருந்து மேலே ஏறும்போது தவறி விழுந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்த கடம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் கால்நடை டாக்டர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் அங்கு சென்று காட்டு யானையை பார்த்தனர். அப்போது அந்த காட்டு யானை உடல் நலிவடைந்து மிகவும் சோர்வான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. மேலும் காட்டு யானையின் இடுப்பு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் காயங்கள் இருந்ததையும் கண்டனர்.

இதைத்தொடர்ந்து யானைக்கு வனத்துறையினர் குளுக்கோஸ் ஏற்றி தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதுமட்டுமின்றி கோடை வெப்பம் காரணமாக யானையின் உடல்நலம் மேலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அதன் மீது நிழல படும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டது. யானை பள்ளமான இடத்தில் கிடந்ததால், சிகிச்சைக்கு பின்னர் மேடான பகுதிக்கு வரும் வகையில், பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டப்பட்டு சமதளம் செய்யும் பணியும் நடந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி காட்டு யானை நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து அந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பகுதியிலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி