கோடை உழவு செய்ய இது ஏற்ற தருணமாகும். கோடை மழையை பயன்படுத்தி, உழவு செய்வது அவசியமாகும். முதலில் வயலில் இரும்பு கலப்பை கொண்டோ அல்லது டிராக்டர் வாயிலாக குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக புழுதிபட உழவு செய்யப்பட வேண்டும். இதனால் கடினத் தன்மையுள்ள மண் கட்டிகள் உடைந்து, பொலபொலப்புத் தன்மை அடைகிறது. பயிர்ப்பருவ காலங்களில், சில வகை பூச்சிகளின் புழுக்கள், மண்ணுக்குள் சென்று, கூட்டுப் புழுவாக மாறி வளர்ந்து கொண்டிருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம், இவ்வகை கூட்டுப் புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்படுகின்றன. அவை பறவைகளால் பிடித்துத் உணணப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, அடுத்த பயிர் சாகுபடியின் போது பூச்சிகளின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது.