பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, பாதயாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி வழிபடுகின்றனர். இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆறாம் நாள் திருவிழாவான இன்று மாலை நடைபெற்றது. திருஆவினன்குடி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானைக்கு திருமணம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானைக்கு பால் , பன்னீர் , சந்தனம் , விபூதி , பஞ்சாமிர்தம் , தேன் , நெய் , போன்ற 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித்தேரேறி நான்கு கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.