கோவையை உலுக்கிய குழந்தை விற்பனை - 5 பேர் கைது

1559பார்த்தது
கோவையை உலுக்கிய குழந்தை விற்பனை - 5 பேர் கைது
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஜிம்ம நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கும் கடந்த 17 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. இந்நிலையில் சூலூர் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஹார்லிக்ஸ் தயாரிக்கும் கம்பெனியின் முன்புறமாக ஹோட்டல் கடை நடத்தி வரும் அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியினரிடம் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விஜயன் தனக்கு குழந்தைகள் இல்லாததை பலரிடமும் சொல்லி வைத்துள்ளார். பரஸ்பரம் பழகிய அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியினர் தங்கள் வசம் பிறந்து 15 நாட்களில் ஆன ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் அது பீகாரில் இருப்பதால் இரண்டரை லட்சம் பணம் கொடுத்தால் உங்களுடைய பெயருக்கு ஆதார் கார்டுடன் பிறப்புச் சான்றிதழ் உடன் குழந்தையைப் பெற்றுத் தருவதாக கூறியுள்ளனர்.

இதற்கு விஜயன் ஒப்புக்கொள்ளவே அஞ்சலி பீகாரில் உள்ள தனது தாயார் பூனம் தேவி, தங்கை மேக குமாரி ஆகியோர் மூலம் கடந்த 20 தினங்களுக்கு முன் பீகாரில் இருந்து பிறந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தையை ரூ.1500க்கு வாங்கி வந்து கொடுத்துள்ளனர். இதையடுத்து விஜயன் குடும்பத்தாரிடம் குழந்தையை கொடுத்து முதலில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் வாங்கியுள்ளனர்.

இன்னும் 70 ஆயிரம் ரூபாய் தர வேண்டிய நிலையில், குழந்தை விற்பனை தொடர்பாக சூலுரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த சைல்ட் லைன் அமைப்பினர் தீவிரமாக விசாரணை செய்து குழந்தை கடத்தி வந்து விற்பனை செய்ததை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த தகவல் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தனிப்படை அமைத்து குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை செய்து வந்தனர். இந்த சம்பவத்தில் அஞ்சலி, மகேஷ் குமாரை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் இந்த குழந்தை மட்டுமல்லாது, மேலும் ஒரு ஆண் குழந்தையை ஆந்திராவைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் விலை பேசி விற்றது தெரியவந்தது.

உடனடியாக இரண்டு குழந்தைகளையும் மீட்ட போலீசார் அஞ்சலி மகேஷ் குமார் தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்ததாக கருமத்தம்பட்டி சூலூர் சுல்தான்பேட்டை காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், குழந்தையை வாங்கியதாக ஜிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விஜயனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் 2 1/2 லட்சம் ரூபாய் பேசி குழந்தையை வாங்கியது ஒப்புக்கொண்டார்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய அஞ்சலியின் தாயார் பூனம் தேவி, அவரது இளைய மகள் மேகா குமாரி ஆகியோரை கோவை வரவழைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களையும் சூலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தை விற்பனை தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் விசாரணை வளையத்தை போலீசார் பெரிதுபடுத்தி வேறு ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி