கர்நாடகா போலீசார் திருவனந்தபுரம் இலவட்டம் பகுதியை சேர்ந்த அன்சாரி (38) என்பவரை கஞ்சா வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை கடந்த 2ம் தேதி போலீசார் திருவனந்தபுரம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் சிறையில் அடைப்பதற்காக போலீசார் பாதுகாப்புடன் கொச்சுவேலி - பெங்களூர் ரயிலில் B1 கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
நேற்று நள்ளிரவு 12. 50 மணியளவில் ரயிலானது பாலக்காடு - போத்தனூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் மெதுவாக சென்றிருந்த நேரத்தில் கைதி போலீசாரை ரயிலுக்குள் தள்ளிவிட்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார். இது குறித்து கர்நாடக ஆயுதப்படை போலீசார் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கஞ்சா வழக்கு கைதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.